×

மனைவி, மகனை பிரிந்து வாழ்ந்ததால் விரக்தி தூக்கிட்டு முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: மனைவி, மகனை பிரிந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட விரக்தியில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பூங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா (58). இவரது கணவர் ராஜேந்திரன் (66). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ராஜேந்திரன் தனது மனைவி விஜயாவை விட்டு கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விஜயா தனது மகனுடன் பூங்காநகர் பகுதியில் வசித்து வருகிறார். இதனையடுத்து, கடந்த 3 மாதமாக காக்களூர் பூஞ்சோலை தெருவில் ராஜேந்திரன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். கடந்த 27ம் தேதி காலை வீட்டின் உரிமையாளர் சந்திரன் என்பவர், ராஜேந்திரன் தங்கியிருந்த வீட்டு வழியாக சென்றபோது துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து சந்திரன் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது ராஜேந்திரன் வீட்டின் மேற்கூறையில் தூக்கிட்டு பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி விஜயாவுக்கு வீட்டின் உரிமையாளர் சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அங்கு விரைந்து வந்த விஜயா தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மனைவி, மகனை பிரிந்த மன உளைச்சலில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மனைவி, மகனை பிரிந்து வாழ்ந்ததால் விரக்தி தூக்கிட்டு முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு