×

ஓட்டுக்காக அடிக்கடி வருகிறார் ; வெறும் கையால் முழம் போடுகிறார் மாநில அரசிடம் பணத்தை வாங்கி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

* 10 ஆண்டுகளாக ரூ.500க்கும் மேல் காஸ் விலையை உயர்த்திவிட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைப்பது, அப்பட்டமான மோசடி வேலையில்லையா?
* சென்னை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, இப்போது மட்டும் அடிக்கடி வருகிறார்.
* தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மீது பாசம் பொங்கும். இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

தர்மபுரி: ஓட்டுக்காக அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். வெறும் கையால் முழம் போடுகிறார். மாநில அரசின் பணத்தை பெற்றுக்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்’ என்று தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ரூ.560 கோடியில் முடிந்த திட்டப்பணிகள் திறப்பு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 8,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது: தர்மபுரி என்று சொன்னால் எனக்கு நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தான். முதல்வர் கலைஞர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆனால், ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. ஒகேனக்கல் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள். உடனே நானே நேரில் இங்கு வந்து போராட்டம் நடத்தினேன். அந்த வகையில் தர்மபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். அவ்வையின் வரலாற்றில் தர்மபுரிக்கு எவ்வாறு பங்கு இருக்கோ, அதேபோல் மகளிர் முன்னேற்றத்திற்கு தர்மபுரிக்கு பங்கு உண்டு. சமீபத்தில் ஒரு டிவியில், மகளிர் உரிமை தொகை பெற்ற ஒரு பெண்மணி, இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் என்று சொன்னாங்க. அப்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், நமது திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும், மகளிருக்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். இந்த திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பட்டியலை நாள் முழுவதும் சொல்லலாம்.
10 ஆண்டாக தமிழ்நாட்டையே சுரண்டினார்களே, அவர்களால் இப்படியெல்லாம் ஏதாவது ஒரு

திட்டத்தை நிறைவேற்ற முடிந்ததா?. உங்களுக்காக பாடுபட முடிந்ததா?. அவர்களால் இப்படி பட்டியலிட முடியுமா? என்றால் முடியாது. இந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்கான ஒகேனக்கல் திட்டத்தையே முடக்கியது தான் அதிமுக ஆட்சியின் சாதனை. வேளாண் கல்லூரி மாணவிகளின் குடும்பத்துக்கு ஏற்பட்ட வேதனையை மீண்டும் விரிவாக நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. உங்களுடைய திராவிட மாடல் அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து செயல்படுகிறது. ஆனால், ஒன்றிய பாஜ அரசு அப்படி மாநிலங்களை சமமாக நினைக்கின்றதா?. ஒன்றிய அரசு என்றால், எல்லா மாநிலங்களையும் மதிக்கணும், வளர்க்கணும். இன்றைக்கு ஒன்றியத்தை ஆளும் அரசு அப்படி செயல்படவில்லை. மாநிலங்களையே அழிக்க நினைக்கிறது. மாநிலங்களை அழிப்பதன் மூலம் நம்முடைய மொழி, இனம், பண்பாட்டை அழிக்கப்பார்க்கிறது.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி. அந்த நிதி ஆதாரத்தை பறிப்பது மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துகின்ற மாதிரி. அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள். மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான், ஒன்றிய அரசு. இதை உணராமல் செயல்படுகிறார்கள். தேர்தல் நெருங்கி வருவதால், பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். இந்த சுற்றுப்பயணங்களை பற்றி தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள். இதை வெற்று பயணங்களாகத் தான் பார்க்கிறார்கள். பிரதமரின் இந்த பயணங்களால் ஏதாவது வளர்ச்சி திட்டங்கள் இருக்கிறதா என்றால் இல்லை. 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டுமான பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திவிடுவார்கள். தேர்தல் வருகிறது என்று சிலிண்டர் விலையை குறைத்து அறிவிக்கிறார் பிரதமர். 10 ஆண்டுகளாக ₹500க்கும் மேல் உயர்த்திவிட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைப்பது, அப்பட்டமான மோசடி வேலையில்லையா?. இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா?.

சென்னை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, இப்போது மட்டும் அடிக்கடி வருகிறார். இதற்கு என்ன காரணம். தேர்தல் வரப்போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன் என்று பிரதமர் சொல்லியிருக்குறார். தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கிறார். ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ₹20 ஆயிரம் கோடி கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட ₹37 ஆயிரம் கோடியை தரவில்லை. மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு பணமும், ஒப்புதலும் வழங்கவில்லை.

பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசு தான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 சதவீதம். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டுகிறார் என்று அவருக்கு நான் நினைவூட்டுகிறேன். இன்னும் கேட்க வேண்டும் என்றால், ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் எங்கே இருந்து வருகிறது?. மாநிலங்களின் வரியாக இருந்தாலும், ஒன்றிய வரியாக இருந்தாலும் மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் கொடுக்கின்ற வரி தான்.

வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல், தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக்கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மீது பாசம் பொங்கும். இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். மக்களான நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். மக்களும், அரசும், திமுகவும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடப்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்கான ஆட்சி. அதனால் தான் உங்கள் குடும்பவிழாவுக்கு வருகிற மாதிரி, நீங்கள் எல்லாம் இங்கு உரிமையுடன் வந்திருக்கிறீர்கள். இதே உணர்வோடும், வளமோடும், நலமோடும் வாழ்வோம். தமிழ்நாட்டையும் வாழ வைப்போம். இந்தியாவுக்கு வழிகாட்டியாக நாம் மாறுவோம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post ஓட்டுக்காக அடிக்கடி வருகிறார் ; வெறும் கையால் முழம் போடுகிறார் மாநில அரசிடம் பணத்தை வாங்கி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tuticorin ,government ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…