விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடியில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்: அச்சத்தில் மக்கள்

விழுப்புரம்: விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ஒன்றிய அரசால் புதியதாக அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.

இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டம் விழுப்புரத்தில் 16 கிராமங்கள், கடலூரில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தமாக 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், புதுச்சேரி மார்க்கம் செல்லும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணித்து வருகின்றன. பல இடங்களில் 6 மாதத்துக்கு முன்னதாக போடப்பட்ட சாலையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. ஒன்றிய அரசின் நிதியில் போடப்பட்ட சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதில் குறிப்பாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், விரிசல் ஏற்பட்ட பகுதியில் மட்டும் பள்ளம் தோண்டிவிட்டு மீண்டும் பேட்ச் ஒர்க் போல் சாலையை சீரமைத்தன.

புதிதாக போடப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லியிலிருந்து நகாய் நிறுவன குழுவினர் நேரில் ஆய்வு செய்த குறைகளை சுட்டி காட்டி சரிசெய்ய அறிவுறுத்தினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இச்சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மீண்டும் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம் அருகே சாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி நின்ற இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

இதனை ஒப்பந்த நிறுவனம் மூடி மறைக்க சிமென்ட் கரைசலை ஊற்றி தற்காலிகமாக சரிசெய்துள்ளன. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. பல ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்ட இச்சாலை பயன்பாட்டுக்கு வரும் முன் பலமுறை பேட்ச் ஒர்க் போட்டும் மீண்டும் விரிசல், உடைப்பு ஏற்படுவது ஆபத்தான பயணத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

The post விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடியில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்: அச்சத்தில் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: