×

திருப்பங்களை தந்தருளும் திருவேங்கடநாதபுரம்

* தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ்த்திருப்பதி மற்றும் காளகஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம்.

* வியாச மாமுனிவரின் சீடரான பைலர், தாமிரபரணி கரையில் ஒரு கோடி மலரால் பூஜித்து, அர்ச்சனை செய்த இடம் ஸ்ரீநிவாச தீர்த்தக்கட்டம்.

* பைலர் பூஜித்தபோது தாமிரபரணி தாயுடனும், கோடி மலர்களுடனும் சேர்ந்து பிரகாசமாக திருவேங்கடநாதர் தோன்றினார். பூதேவி, ஸ்ரீதேவி, அலர்மேல்மங்கையுடன் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கினார் பைலர். அன்று முதல் இத்தலம் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.

* வெங்கடப்ப நாயக்கர் ஸ்ரீநிவாசர் தீர்த்த கட்டத்தில் மூழ்கி வணங்கினார். அசரீரியாக பெருமாள் ‘ஆயிரம் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கு’ என்றார். நாயக்கரும் அன்னதானம் வழங்கி குழந்தைப்பேறு பெற்றார். நன்றிக் கடனாக, கோயிலைக்கட்டினார்; அந்த தலத்திற்கு வேங்கடநாதபுரம் என்று பெயரும் வைத்தார்.

* மூலவர் திருவேங்கடமுடையார் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார்.

* மூலவர் தவிர தனிச் சந்நதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் வீற்றிருக்கின்றனர். விஷ்வக்சேனருக்கும் தனிச் சந்நதி உண்டு.

* திருவேங்கடநாதபுரத்துக்கு திருவணாங்கோயில், சங்காணி, குன்னத்தூர் என்ற சுவேதா மலை, சாலிவாடீஸ்வரம், வைப்பராச்சியம் ஆகிய பெயர்கள் உண்டு. தற்போது இத்தலத்தை திருநாங்கோயில் மற்றும் மேலத் திருவேங்கடநாதபுரம் என்றழைக்கிறார்கள்.

* திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சையை தென் திருப்பதியான திருவேங்கடநாதபுரத்தில் செலுத்தலாம். ஆனால் இங்கு நேர்ந்து கொள்ளும் நேர்ச்சையை திருப்பதியில் செலுத்த முடியாது.

* குழந்தைப் பேறுக்காக உருளிப் பானையில் பொங்கலிட்டு தானம் செய்து அந்தப் பானையை கொடிமரத்தடியில் கவிழ்த்து வைக்கின்றனர். விரைவில் குழந்தைப்பாக்கியம் பெறுகின்றனர்.

* மணி மண்டபத்திற்கு எதிரே மதில் சுவரின் உட்புறம் தென்கிழக்கு மூலையில் தல விருட்சமான நெல்லிமரம் உள்ளது.

* திருப்பதி மலை வெண்கற்களால் ஆனது போலவே சங்காணி மலை குன்றும் வெண்கற்களால் ஆனது.

* புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடசேவை நடப்பது வழக்கமானது தான்; ஆனால், பக்தர்கள் விரும்பி கேட்கும் நாட்களில் கூட கருடசேவை நடத்தப்படுகிறது.

* தெற்குப் பிராகாரத்தில் உள்ள வெண்கலக்கருடன் இருபுறமும் மடித்த இறக்கைகளுடன் கையில் சங்கு-சக்கரத்துடன் அபூர்வமாகக் காணப்படுகிறார்.

* இத்தலத்தில் உள்ள கீழ்த்திருப்பதி வரதராஜப்பெருமாள், பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவர் சதுர்புஜத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

* பெருமாளின் வலக்கரம் ஒன்றில் சக்கரமும், மற்றொரு கரத்தில் தனரேகையும் ஓடுகிறது. இடதுபுறக்கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் கதாயுதமும் காணப்படுகின்றன.

* இவரை தனரேகைப்பெருமாள், வாழவைக்கும் பெருமாள் என்கிறார்கள். தனரேகை கரத்தில் பணம் வைத்து எடுத்துச் சென்றால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாதாம்.

* பெருமாளின் கையில் தனரேகை ஓடும் காரணத்தால் இதை சுக்கிரத்தலம் என்பர்.

* காளஹஸ்திக்கு இணையான தலமாக இங்குள்ள சிவாலயம் விளங்குகிறது.

* கோத பரமேஸ்வரரும், அன்னை சிவகாமியும் சர்ப்பதோஷம், நாக தோஷம் நீக்குகின்றனர். தடைப்பட்டதிருமணங்கள் விரைவில் நடக்கின்றன.

* இத்தலத்திற்கு நெல்லை சந்திப்பிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. ஆட்டோவிலும் செல்லலாம்.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி.

The post திருப்பங்களை தந்தருளும் திருவேங்கடநாதபுரம் appeared first on Dinakaran.

Tags : Thiruventanathapura ,THIRUVENKADANATHAPURAM ,KALAKASTI ,TAMIRAPARANI BANK ,Thiruvengadanathapuram ,
× RELATED காட்டு யானைகள் முகாம்: சுருளி அருவியில் குளிக்க தடை