நாமக்கல்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், நாமக்கல்லில் மாவட்ட பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசியதாவது: அரசின் பல்வேறு வரி விதிப்புகளால் வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆன்லைன் வர்த்தகத்தால் 17 சதவீதம் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் இந்தியா முழுவதும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு சட்டங்களின் மூலம் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். மாநில மாநாட்டுக்கு பின்பு ஆயிரக்கணக்கான வணிகர்களை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள வணிகர்கள் கேரளாவில் சென்று மால் திறக்க முடியாது. ஆனால், அவர்களால் தமிழகத்தில் மால் திறக்க முடிகிறது. தமிழகத்தில் ஒரு மால் திறக்கப்பட்டால் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் அந்த பகுதியில் பாதிக்கப்படுவார்கள். எனவே, இங்குள்ள வணிகர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.
The post ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி டெல்லியில் வணிகர்கள் போராட்டம் நடத்த முடிவு: விக்கிரமராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.