×

ஓணம் பண்டிகை விடுமுறை எதிரொலி; குமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கேரளாவில் இருந்து படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள்

கன்னியாகுமரி: ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி கேரளாவில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் பலரும் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்ததால் களைகட்டியது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்தநிலையில் இன்று கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கேரளாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக இன்று காலையிலேயே தயாராகிவிட்டனர். இந்தநிலையில் கேரளாவில் உள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் விடுமுறையை கொண்டாடுவதற்காக அங்கிருந்து கன்னியாகுமரிக்கு படையெடுத்துள்ளனர். இதனால் இன்று காலை முதலே கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலையில் சூரிய உதயத்தை பார்த்ததோடு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று ரசித்தனர்.

ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் படகு சவாரி டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது. பலரும் தின்பண்டங்களை வாங்கி கொரித்துக்கொண்டே கடற்கரையில் ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டிந்ததை பார்க்க முடிந்தது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஓணம் பண்டிகை விடுமுறை எதிரொலி; குமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கேரளாவில் இருந்து படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Onam festival ,Kumari beach ,Kerala ,Kanyakumari ,northern ,Kanyakumari beach ,Dinakaran ,
× RELATED கேரளாவில் நகரசபை அலுவலகத்தில்...