×

திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் எள் அறுவடை

*சாலைகளில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் எள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட எள் சாலைகளில் காயவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறியது.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையானது ஜுன் 12ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கடந்தாண்டு வரலாற்றில் இல்லாத வகையில் மே மாதம் 24ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்திலும், வரலாற்றில் இல்லாத வகையில் முன்கூட்டியும் திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் உளுந்து பயிர் சாகுபடி மட்டுமின்றி பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு, எள், சோளம் உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

எள்ளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன் எலும்புகள் உறுதியாக இருக்கவும், ரத்த சிவப்பு அனுக்கள் உற்பத்தி அதிகரிக்கவும், தைராய்டு நோயினை குறைப்பதற்கான செலினியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த தானியமாகும். இதனை வெல்லம் சேர்த்து எள் உருண்டையாகவோ அல்லது எள் சட்னி உட்பட பல்வேறு வகைகளில் உபயோகிக்கலாம்.

மேலும் இந்த எள் தானியத்தை கொண்டு தயார் செய்யப்படும் நல்லெண்ணெய் என்பது மனித உடலுக்கு பயன்பட கூடிய முக்கிய பொருளாக இருந்து வருவதும் குறிப்பிடதக்கது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த எள் பயிரிரானது நடப்பாண்டில் மொத்தம் 11 ஆயிரத்து 900 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில் தற்போது இந்த பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ளதையடுத்து அவ்வாறு அறுவடை செய்த பயிர்களை விவசாயிகள் காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

The post திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் எள் அறுவடை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,
× RELATED தில்லைவிளாகம் அரசு பள்ளியில் 11, 12ம்...