×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ₹2.36 கோடி உண்டியல் காணிக்கை

*பக்தர்கள் செலுத்தினர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சித்திரை மாதத்துக்கான உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில், ₹2.36 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஆடி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை நடந்தது.

கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, கோயில் உண்டியலில் ₹2 கோடியே 36 லட்சத்து 82 ஆயிரத்து 980 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 223 கிராம் தங்கம், 1.155 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் ₹2 கோடியை கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ₹2.36 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruvannamalai ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ...