×

திருச்செந்தூர் அருகே சட்டைப் பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்ததால் இளைஞர் காயம்..!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே சட்டைப் பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்ததால் இசக்கியப்பன் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இசக்கியப்பன், திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறார்.

இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது உறவினரைப் பார்க்க ஆறுமுகநேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வீட்டில் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது அவருடைய மேல்சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் அவருக்கு இடது மார்பு ,முகம் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அலறிதுடித்த அவரை, உறவினர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்செந்தூர் அருகே சட்டைப் பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்ததால் இளைஞர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Thoothukudi ,Ishakyappan ,Thoothukudi district ,
× RELATED திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட 5 சவரன்...