×

கடை ஷட்டரை மூடியபோது மின்சாரம் பாய்ந்து கடை ஊழியர் பலி

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் ஏற்கனவே ஒரு சம்பவம் நடந்தநிலையில், கொடுங்கையூரில் ஷட்டர் மீது மின்சாரம் பாய்ந்து மீண்டும் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடுங்கையூர் காந்திநகர் 3வது தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் (50). இவர், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியில் சொந்தமாக காய்கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பம்தட்டை தாலுகா பகுதியை சேர்ந்த அழகர்சாமி (45) என்பவர் கடந்த 5 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு, அழகர்சாமி கடையின் ஷட்டரை இழுத்து மூட முயன்றார். அப்போது ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து அழகர்சாமி தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகர்சாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த அழகர்சாமிக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார்.

அழகர்சாமியின் மரணம் குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மளிகைக் கடையின் ஷட்டரை திறந்தபோது அதில் மின்சாரம் பாய்ந்து கோபி (29) என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், மீண்டும் கொடுங்கையூர் பகுதியில் அதேபோன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கடை ஷட்டரை மூடியபோது மின்சாரம் பாய்ந்து கடை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Pulianthoppu ,Kodungaiyur ,Dinakaran ,
× RELATED வேறொரு பெண்ணுடன் தொடர்பால் தூங்கிய கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி