×

திருவொற்றியூரில் பயங்கர சம்பவம் திமுக பிரமுகரின் மகன் சரமாரி வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்

சென்னை: திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர், பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திமுக பகுதி பிரதிநிதியாக உள்ளார். மேலும் ஆர்வி இன்ஜினியரிங் என்ற கட்டிட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் காமராஜ் (34). இவர் தந்தையுடன் சேர்ந்து கட்டுமான நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இவருக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி யாமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு காமராஜ் வந்துள்ளார். அங்கே அலுவலக ஊழியர் அன்புவிடம் அன்றைய பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காமராஜை சரமாரியாக வெட்டியது.

அப்போது வெளியில் 3 பைக்குகளில் மேலும் 3 பேர் தயாராக நின்றிருந்தனர். காமராஜை வெட்டி சாய்த்துவிட்டு கொலையாளிகள் மூவரும் பைக்குகளில் பின்னால் அமர்ந்து தப்பிச் சென்றனர். காமராஜுக்கு தலை, முதுகு என பல இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எண்ணூர் சரக உதவி ஆணையர் பிரம்மானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எண்ணூர் போலீசார் அனுப்பி வைத்தனர். காமராஜை படுகொலை செய்துவிட்டு தப்பிய கும்பலை 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அலுவலக வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் கொலையாளிகளை பிடிக்க விரைந்துள்ளனர்.
பட்டப்பகலில் திமுக நிர்வாகியின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ஏராளமான திமுகவினர் மருத்துவமனை வாசலில் குவிந்தனர்.

 

The post திருவொற்றியூரில் பயங்கர சம்பவம் திமுக பிரமுகரின் மகன் சரமாரி வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,DMK ,Chennai ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்