ஒன்றிய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதை கண்டித்து, ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளது. இதைக் காரணம் காட்டி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2165 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது. நிதி வழங்காமல் பிடிவாதம் காட்டி வரும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கங்கள், அமைச்சுப் பணியாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை 10 மணி அளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமுமுக சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முடித்து ைவக்க இருக்கிறார்.

 

The post ஒன்றிய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: