×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் “பிப்பர்ஜாய்” நேற்று காலை 11:30 மணி அளவில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும். வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 135 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதன் பிறகு, அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Survey Centre ,Chennai ,Puducherry ,Karaikal ,Chennai Meteorological Research Centre ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...