![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32964617/thumb.jpg)
அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம், 84வது வார்டுக்கு உட்பட்ட கொரட்டூரில் சுமார் 80000 கும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் கொரட்டூர், அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்வதற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை – கொரட்டூர் பால் பண்ணை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில், கடந்த ஒரு வாரமாக, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 84வது வார்டு கவுன்சிலருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த கழிவுநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இந்த கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தின் அருகே போலீஸ் பூத் அமைந்துள்ளதால் போலீசார் சிரமப்படுகின்றனர். எனவே, கழிவுநீர் தேக்கத்தால் நோய் தொற்று பரவுவதற்கு முன், உரிய நடவடிக்கை நடவடிக்கை வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் கழிவுநீர் தேக்கம் appeared first on Dinakaran.