×

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழை எதிர்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

சென்னை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
4 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அந்த 4 மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாகராஜன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜோதி நிர்மலா, தென்காசி மாவட்டத்திற்கு சுன்சோங்கம் ஜதக் சிரு ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு மற்றும் கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். அதிகனமழை பெய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் விரைந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்கள் கொண்ட தலா 2 குழுக்களும் விரைந்துள்ளன. அதிகனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், பாதுகாப்பாக இருக்குமாறு 2.18 லட்சம் பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேபோல் இன்று தென் தமிழ்நாடு மற்றும் அதனை அடுத்துள்ள வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை மற்றும் தென் கேரள கடலோரப் பகதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், நாளை தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா ,குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

அதேபோல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக தேவைப்படும் இடங்களில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் மூலம் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

4 மாவட்ட கலெக்டர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவுகள்

* நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

* முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

* பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும்.

* ரொட்டி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

* மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்

மக்களுக்கான அறிவுரை

* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்

* முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்பி எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

* அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

The post நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழை எதிர்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IAS ,Nellai, Thoothukudi ,Tenkasi, Kumari ,Chief Minister ,Chennai ,India Meteorological Department ,Nellai ,Thoothukudi ,Thenkasi ,Kanyakumari ,Nellai, ,Kumari ,Dinakaran ,
× RELATED அயோத்திக்கு சுற்றுலா ரயிலில் சென்ற...