×

தவறை தட்டிக்கேட்டால் கத்தி, அரிவாளால் தாக்குதல் சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட பெண் நிர்வாகி: ஊழல் செய்பவர்கள் கருத்து மட்டும் கேட்பதாக குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தவறை தட்டிக்கேட்டால் கத்தி, அரிவாளால் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று சீமானுக்கு எதிராக பெண் நிர்வாகி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மேரி ஆட்லின் என்பவர் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டார். அவர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘விளவங்கோடு தொகுதியில் 2021ல் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டேன், தேர்தல் முடிந்ததில் இருந்து பரவலாக பெரிய அளவில் பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கிறது. கட்சியில் பல குழப்பங்கள், கட்சியை அழிக்க ஒரு குழு, பல சிக்கல்கள் தாண்டி சமீபத்தில் 2 நாட்கள் முன்பு சீமான் அண்ணன் பிரச்னையை தீர்ப்பதாக ஊருக்கு வந்திருந்தார். அவர் வரும் போது தீர்வு கிடைக்கும் என்று பேரூராட்சி, ஊராட்சி உறவுகள் எங்கள் கருத்துகளை முன்வைக்க சென்றோம்.

நிர்வாகிகள் சிலர் ஊழல் செய்பவர்கள், கட்டமைப்பை உடைப்பவர்கள், கட்சிக்கு எதிராக உள்ளவர்களை பொறுப்பில் போட்டுவிட்டு அவர்கள் சொல்லும் கருத்துகள் மட்டும் கேட்கப்படுகிறது. இந்த நிர்வாகத்தில் நிர்வாகிகளே தவறு செய்கிறார்கள். பேச சென்றால் மண்டல செயலாளரே கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர், அடியாட்களை வைத்து கத்தி அரிவாள் எல்லாம் கொண்டு வந்து ரோட்டில் வைத்து உறவுகளை தாக்குகிறார். இது நடந்தும் கூட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசியத்தை கட்டமைக்கின்றவர் என்ன தீர்வு கொடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை சென்று பார்த்திருக்க வேண்டும். இதுவரை அது நடக்கவில்லை. இரண்டு பக்கமும் விளக்கம் கேட்கப்படவில்லை. ஒருவர் சொல்கிறார் என்றால் அவரை கட்சியை விட்டு நீக்கு. அப்படி இருக்கிறாரா அவரை ஒதுக்கிவிட்டு வேலை செய்யுங்கள் என்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

* கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
பெண் நிர்வாகி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மேரி ஆட்லின் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதால், அடிப்படை உறுப்பினரில் இருந்தே முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது, இவரோடு, கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்புவைத்துக்கொள்ள வேண்டியது இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

The post தவறை தட்டிக்கேட்டால் கத்தி, அரிவாளால் தாக்குதல் சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட பெண் நிர்வாகி: ஊழல் செய்பவர்கள் கருத்து மட்டும் கேட்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : seaman ,Nagercoil ,Seeman ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...