×

பள்ளிபாளையத்தில் பஸ்சில் இடமிருந்தும் படியில் தொங்கும் மாணவர்கள்

பள்ளிபாளையம் :பள்ளிபாளையத்தில் பஸ்சில் போதிய இடமிருந்தும், படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்களின் சாகச பயணத்தால் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
பள்ளிபாளையத்திற்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் உயர்கல்விக்காக வந்து செல்கின்றனர். நடுநிலை பள்ளி படிப்பை கடந்து, அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை, மாலை நேரங்களில். பஸ்களில் போதிய இடமிருந்த போதிலும், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஓட்டுனர், நடத்துனர்கள் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், படியில் பயணம் செய்து வருகின்றனர்.இதனை கண்டித்தால், ஏக வசனத்தில் ஒருமையில் மாணவர்கள் திட்டுவதால் பெரும்பாலான நடத்துனர்கள் அமைதியாகி விடுகின்றனர்.கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பயிலும் மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்தபோது, ஐந்துபனை அருகே சாலையின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த மினி லாரியில் மோதி 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆபத்தை உணராத மாணவர்கள், மீண்டும் படிக்கட்டு பயணத்தில் ஈடுபட்டு வருவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்து எச்சரிக்கும் பணியினை போலீசார் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கலெக்டரும், எஸ்பியும் இதுகுறித்து போலீசாருக்கு அறிவுறுத்தி, ஆபத்தான படிக்கட்டு பயணத்தை தடுக்க வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post பள்ளிபாளையத்தில் பஸ்சில் இடமிருந்தும் படியில் தொங்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,
× RELATED பள்ளிபாளையத்தில் கையகப்படுத்தப்பட்ட...