×

சத்தியமங்கலம் அருகே மினிலாரியை வழிமறித்து உருளைக்கிழங்கு மூட்டையை பறித்து தின்ற காட்டு யானை

சத்தியமங்கலம: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மினிலாரியை வழிமறித்து உருளைக்கிழங்கு மூட்டையை பறித்து ருசித்து தின்ற காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதிகளில் விளையும் காய்கறிகள் தினமும் வாகனங்களில் பாரம் ஏற்றப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கிடையே கேர்மாளம் பகுதியிலிருந்து உருளைக்கிழங்கு மூட்டைகள் பாரம் ஏற்றிய மினி லாரி மேட்டுப்பாளையம் செல்வதற்காக சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. சீவக்காய்பள்ளம் என்ற பகுதியில் மினி லாரி மெதுவாக சென்றபோது சாலையில் நடமாடிய காட்டு யானை மினிலாரியை வழி மறித்தது. யானையை கண்டதும் அச்சமடைந்த வாகன ஓட்டுநர் லாரியை நிறுத்தினார்.

அப்போது அருகே வந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் பறித்தது. இதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டுனர்கள் யானையை சத்தம் போட்டு விரட்டி அடிக்க முயன்றனர். அப்போது காட்டு யானை உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் எடுத்துக்கொண்டு சாலையோர வனப்பகுதிக்கு கொண்டு சென்று ருசித்து தின்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post சத்தியமங்கலம் அருகே மினிலாரியை வழிமறித்து உருளைக்கிழங்கு மூட்டையை பறித்து தின்ற காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,National Highway ,Satyamangalam ,
× RELATED சத்தியமங்கலம் முகமதியர்...