×

ஒசட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.57.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள,மேலூர் ஊராட்சி ஒசட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு, 56 பயனாளிகளுக்கு ரூ.57.58 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஊட்டி அருகே உள்ள மேலூர் ஒசட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.இந்த முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது.ஏராளமான மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று இது போன்ற முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று கொள்வதோடு,தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருவதுதான் இம்மனுநீதி நாள் முகாமின் நோக்கமாகும்.

இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளது.இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 குழுவிற்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளும்,ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்திற்கான வைப்புத் தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் சார்பில், மூன்று பயனாளிகளுக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரங்களையும்,இரு பயனாளிகளுக்கு ரூ.31,030 மதிப்பில் தெளிப்பு நீர் பாசன கருவிகளும்,இரு பயனாளிகளுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் மண்புழு உர படுக்கையும்,3 பயனாளிகளுக்கு ரூ.19 ஆயிரம் மதிப்பில் இயற்கை இடுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 10 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 7 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வழங்கல்துறையின் சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், வேளாண் பொறியியல்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 788 மதிப்பிலான பவர் டில்லர் வழங்கப்பட்டது.மேலும், ஒரு பயனாளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான டிராக்டர் என மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.57.58 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்கள் அறிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும், என்றார்.

முன்னதாக, கலெக்டர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட தொழில் மையம், பள்ளி கல்வித் துறை, பொது விநியோகத்திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இம்முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா,தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா,கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்தியநாராயணன்,வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷணன்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், குன்னூர் ஊராட்சித்தலைவர் சுனிதாநேரு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திலகவதி,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சுரேஷ்கண்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷாகுல் ஹமீது,குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, சந்திரசேகர்,மேலூர் ஒசட்டி ஊராட்சி த்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மேலூர் ஊர்த்தலைவர் ஆல்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒசட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.57.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Public Relations Camp ,Osati ,Ooty ,District Collector ,Lakshmi Bhya Dhaniru ,Malur Oratchi Osati ,Ossetiappeared ,Dinakaran ,
× RELATED தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம்