×

பாஜவை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: திண்டுக்கல் சீனிவாசன் திடீர் சபதம்

திண்டுக்கல்: ‘தமிழகத்தில் பாஜவை அளிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்’ என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவை விட்டு வெளியேறினாலும் சிறுபான்மையினர் ஓட்டுகள் மட்டுமல்லாது இந்துக்கள் ஓட்டும் அதிமுகவிற்கு கிடைக்காது என பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார். அவர் கருத்தை அவர் சொல்கிறார். நாங்கள் தமிழகத்தில் அவர்களை (பாஜவை) அழிக்கும் வரை ஓய மாட்டோம். அவர் அவரது ஜோசியத்தில் சொல்கிறார்.

எங்களுக்கு இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் வாக்கு 25 சதவீதம் வரும். அதுபோக அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஓட்டுகள் என 45 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் வாங்கி தமிழகத்தில் அதிக இடத்தை பிடிப்போம். ஓ.பன்னீர்செல்வமோ மற்றவர்களோ (பாஜ) யாரும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். அதன்பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தான் எங்களது ஆதரவு. தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத வரை அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றி பெறுவதே எங்களது நோக்கம். மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு கிடையாது. இவ்வாறு தெரிவித்தார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்த அதிரடி பேச்சு, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post பாஜவை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: திண்டுக்கல் சீனிவாசன் திடீர் சபதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Dindigul Srinivasan ,Dindigul ,Tamil Nadu ,AIADMK West District ,Former ,minister ,
× RELATED பழனி பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி: பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு