டெல்லி: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என 4வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன. ஆனால் மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் அதுபற்றி விவாதிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் தினமும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து இரு சபைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இன்று மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் எழுந்து பேச முயன்றனர். மல்லிகார்ஜுன கார்கேவின் மைக்கின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் அவரது பேச்சு என்பது சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கேட்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கம் எழுப்பியதால் மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் மல்லிகார்ஜூன கார்கேவின் ‛மைக்’ ஆப் செய்யப்பட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓபிரையன் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மைக் ஆப் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛INDIA’ கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநட்பு செய்தன. நாடாளமன்றம் இருண்ட அறையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
The post மல்லிகார்ஜுன கார்கேவின் மைக் துண்டிப்பு!: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.