×

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிவன்தாங்கலை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன். அவரது மனைவி தனலட்சுமியும், மகன் டில்லிராஜாவும் ஸ்ரீபெரும்புதூரில் 2000 சதுர அடி நிலத்தை வாங்கினர். ரூ.11 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரூ.10 லட்சத்துக்கு வாங்கியதாக மூன்று பேருக்கும் எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு மனுதாக்கல் செய்தனர்.

அதில், நிலம் வாங்கிய பின் காவல்துறை அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞருடன் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்ட போது அதை தர மறுத்ததால் தங்களுக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுத்துறைகளில் அதிகளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால், நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் மலிந்து வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தின் பயத்தை காட்டினால் ஒழிய அரசுத்துறைகளில் ஊழலை கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை அரசு வகுக்க வேண்டும். இது சம்பந்தமாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் நியமிக்கப்படுகிறார். அவர் இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...