×

பொன்னேரி அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல்

பொன்னேரி: பொன்னேரி அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது மிக்ஜாம் புயலால் நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய நிலையில் பயிர் காப்பீடு முறையாக கிடைக்கவில்லை என விவசாயிகள் அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில் பொன்னேரி அருகே நேற்று மெதூர் கிராமத்தில் பயிர் காப்பீடு பெற்று தர வலியுறுத்தி விவசாயிகள் பொன்னேரி – பழவேற்காடு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆண்டுதோறும் பயிர் காப்பீட்டு தொகை செலுத்தி வரும் நிலையில், மழை, புயல், வெள்ள சேதத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைப்பதில்லை.

ரேண்டம் முறை என காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை அலைக்கழிப்படுகின்றனர். ஆண்டுதோறும் காப்பீட்டு தொகை செலுத்தி வந்தாலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் குளறுபடி செய்கிறது. இருசக்கர வாகனங்கள் எப்போது பழுதடைந்தாலும் உடனுக்குடன் காப்பீட்டு தொகை கிடைப்பதாகவும் பயிர்கள் சேதம் அடையும் போது முறையாக காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வேளாண் துறை அதிகாரிகள் தங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் வேளாண்துறை அதிகாரியிடம், முறையாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதில்லை என விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வேளாண் துறை அதிகாரியிடம் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்னை குறித்து பேசி தீர்வு காண்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக பொன்னேரி – பழவேற்காடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பொன்னேரி அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Migjam ,Dinakaran ,
× RELATED பொன்னேரி பிரியாணி கடையில் சிக்கன்...