×

அரசியல் பேச்சு வேண்டாம், சந்திப்பு வேண்டாம் அண்ணாமலை, ஓபிஎஸ்சுக்கு பிரதமர் மோடி திடீர் தடை: விரதம் இருப்பதால் கவர்னருக்கும் கட்டுப்பாடு

சென்னை: அரசியல் பேச்சு வேண்டாம், சந்திப்புகள் வேண்டாம், சால்வை, பூ, பொக்கே எதுவும் வேண்டாம் என்று கட்சியினர் மற்றும் ஆளுநருக்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் துரைமுருகன், எம்பிக்கள் தயாநிதிமாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோரும் வரவேற்றனர். பன்னீர்செல்வத்திடம் மட்டும் மோடி ஏதோ தனியாக ஒரு நிமிடம் பேசினார். ஆனால் யாரிடமும் சால்வை, பூங்கொத்து ஆகியவற்றை வாங்கவில்லை. பின்னர் ஐஎன்எஸ் அடையாறு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோருடன் அண்ணாமலையும் வரவேற்றார்.

பின்னர், மோடி தனது காரில் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று அண்ணாமலை எதிர்பார்த்தார். ஆனால் அவரை ஏற்றவில்லை. தனியாக மோடி மட்டும் புறப்பட்டுச் சென்றார். மேலும் 3 நாள் நிகழ்ச்சியில் ஒவ்வொரு இடத்துக்கும் பாஜகவினரை 10 பேராக பிரித்து நின்று வரவேற்கும்படி பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. அதன்படி நேரு விளையாட்டரங்கிலும் சில பாஜகவினர் வரவேற்றனர். நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது குஷ்பு, நடிகர் அர்ஜூன் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் ஆளுநர் மாளிகையில் மோடி தங்கினார். இதனால் ஆளுநர் மாளிகை வரை அண்ணாமலை, முருகன் ஆகியோர் சென்றனர். அவர்களையும் வாசல்வரை மட்டுமே அனுமதித்த அதிகாரிகள், அரசியல் சந்திப்புகள் எதுவும் வேண்டாம் என்று அனுப்பி விட்டனர்.

ஆளுநரையும் தனியாக சந்திக்க மோடி மறுத்து விட்டார். பின்னர் நேற்று காலையில் புறப்பட்டபோது ஆளுநர் வழியனுப்பி வைத்தார். அதேபோல திருச்சியில் அண்ணாமலை வரவேற்றார். பின்னர் ரங்கம் சாமிதரிசனம் முடிந்ததும், பிரதமர் மோடி செல்லும் ராணுவ ஹெலிகாப்டரில் தான் வர அனுமதிக்கும்படி அண்ணாமலை கேட்டுக் கொண்டார். ஆனால் அதிகாரிகள் மறுத்து விட்டனர். நாளை டெல்லி திரும்பும்வரை எந்த அரசியல் சம்பந்தமாகவும் யாரும் பேச வேண்டாம். அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வருகிறேன் அப்போது பேசலாம் என்று கூறி விட்டார். இதனால் அரசியல் பேச காத்திருந்த அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் ரவி ஆகியோர் ஏமாற்றம் அடைந்தனர்.

The post அரசியல் பேச்சு வேண்டாம், சந்திப்பு வேண்டாம் அண்ணாமலை, ஓபிஎஸ்சுக்கு பிரதமர் மோடி திடீர் தடை: விரதம் இருப்பதால் கவர்னருக்கும் கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,PM Modi ,CHENNAI ,Modi ,Dinakaran ,
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...