×

போலீஸ் போல் நடித்து கைவரிசை சென்னை தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.12 லட்சம் தங்கம் பறிப்பு: 10 பேர் கும்பலுக்கு வலை

கோவை: சென்னை ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாவக்கல்லை சேர்ந்தவர் சஜீவ் (42). பெங்களூர் டாலர் கம்பெனி பகுதியில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னை பல்லாவரத்தில் வசிக்கின்றனர். சஜீவ் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து செல்போனில் சஜீவை தொடர்பு கொண்டு பேசிய சிலர், கிருஷ்ணகிரியில் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதன்படி, கடந்த 8ம் தேதி சஜீவ், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். சென்னையில் இருந்து வந்த நபர்களுக்கு நிலம் விற்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல் போலீஸ் போல் அந்த ஓட்டல் அறைக்கு வந்தனர். சஜீவிடம், நிலம் மற்றும் இரிடியம் விற்பதாக மக்களை ஏமாற்றி வருகிறீர்கள், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கூறி காரில் ஏற்றி பல பகுதிகளுக்கு அழைத்து சென்று சொத்து விவரங்களை கேட்டு மிரட்டினர்.

இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்த கும்பல் அங்கு சஜீவை அடைத்து வைத்தனர். அப்போது சஜீவுக்கு தெரிந்த ஜிப்சன், சிபின் மற்றும் அலெக்ஸ் ஆகிய 3 பேர் அங்கு வந்தனர். 10 பேரும் சேர்ந்து சஜீவிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். அவரிடமிருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் அந்த கும்பல் ரூ.12 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க செயின், பிரேஸ்லெட் மற்றும் 3 மோதிரத்தை பறித்து கொண்டு, காரில் ஏற்றி சேலம் செல்லும் வழியில் இறக்கி விட்டு தப்பினர். இந்த கும்பல் டி.என்-10 எச்பி 5262 என்ற பதிவெண் கொண்ட காரில் கடத்தியதாக, சஜீவ் கோவை காட்டூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

The post போலீஸ் போல் நடித்து கைவரிசை சென்னை தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.12 லட்சம் தங்கம் பறிப்பு: 10 பேர் கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Govai ,Chennai ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!