×

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.7.2024) தலைமைச் செயலகத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த 5 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 7 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான
நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த 15 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இவர்களில், பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கி சுடுதல்), துளசிமதி முருகேசன்(பாரா பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்) நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் சிவரஞ்சன் சோலைமலை (பாரா பேட்மிண்டன்) ஆகியோருக்கு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகள்.

மேற்கொள்வதற்காக சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 7 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் இன்றையதினம் வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,M. K. Stalin ,Chennai ,M. K. ,Stalin ,Chief Minister of ,Tamil Nadu ,K. Stalin ,France ,Dinakaran ,
× RELATED விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்கு...