×

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி ‘தமிழினத் தலைவர்’ கலைஞரை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதந்தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்த வேண்டும்.

பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அந்தவகையில், அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அமைய வேண்டும் எனவும் முதல்வர் கூறியிருந்தார். அதனடிப்படையில் கடந்த ஜூன் 2ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார்.

மேலும், கலைஞரின் பல்வேறு திறமைகள் கொண்ட பன்முக வித்தகர். அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில் இதழாளர், எழுத்தாளர், கலைஞர், சமூக நீதிக் காவலர், பண்பாட்டுப் பாசறை, ஏழைப் பங்காளர், சட்டமன்ற நாயகர், பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல், நவீன தமிழ்நாட்டின் சிற்பி, நிறுவனங்களின் நாயகர், தொலைநோக்குச் சிந்தனையாளர், தமிழ்த்தாயின் தவப்புதல்வன், போன்ற தலைப்புகளில் அமைச்சர்கள் தலைமையில் இணைத்தலைவர்கள், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட 12 குழுக்கள் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுக்கள் கலைஞர் பன்முகத்தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விழாக்களாக அமைய வேண்டும் என்பதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ministers ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stal ,
× RELATED தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்...