×

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக, பொருளாதார, உளவியல் நலன் கணக்கெடுப்பு பணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக, பொருளாதார, உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக, பொருளாதார, உளவியல் நலன் கணக்கெடுப்பு பணி தொடக்க விழா திரு.வி.நகர்.மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் வட சென்னை பகுதி மேம்பாட்டிற்காக வட சென்னை வளர்ச்சி திட்டம் என புதிய திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்திற்காக ரூ.1000 கோடி, மூன்றாண்டுகளில் செலவிடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி வட சென்னை வளர்ச்சி திட்டம் சமூக-பொருளாதார-உளவியல் நலன் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வட சென்னை வளர்ச்சி திட்ட சமூக,பொருளாதார, உளவியல் நலன் கணக்கெடுப்பு பணிக்காக சிஎம்டிஏ, மாநகராட்சி , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இக்கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள உள்ளது.

இதற்காக மகளிர் கிறிஸ்துவ கல்லூரியிலிருந்து 500 மாணவிகள், 22 பேராசிரியர்கள் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியிலிருந்து 500 மாணவர்கள், 42 பேராசிரியர்கள் ஆக கூடுதலாக 1000 மாணவர்கள் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1-திருவொற்றியூர், மண்டலம்2- மணலி, மண்டலம் 3 – மாதவரம், மண்டலம் 4 – தண்டையார்பேட்டை, மண்டலம் 5 – இராயபுரம், மண்டலம் 6 திரு.வி.க நகர், மற்றும் மண்டலம் 7 – அண்ணாநகர் ஆகிய 7 மண்டலங்களில் 1000 மாணவ, மாணவிகள் தலா 10 பேர் வீதம் 100 குழுக்களாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்கின்றனர்.

மேலும் இந்த ஏழு மண்டலங்களில் பல்வேறு தரப்பு மக்களிடையே 13 இடங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியின் மூலம் அப்பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றம், சமூக மாற்றங்கள் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் திட்டங்கள் வகுக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

The post வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக, பொருளாதார, உளவியல் நலன் கணக்கெடுப்பு பணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,Chennai ,
× RELATED அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில்...