திருச்சி, டிச.3: திருச்சியில் தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து அரசியல் கட்சியினர் சார்பில் மாநகர கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்று திரட்டி புதிய அமைப்பான தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் என்ற அமைப்பு திருச்சியில் கடந்த 23ம் தேதி துவங்கப்பட்டது. இதன் தலைவராக பங்க் ராஜேந்திரன் என்பவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில், வரும் 20ம் தேதி தென்னூர் உழவர் சந்தையில் தேவேந்திரகுல அரசாணையை வெளியிட வேண்டும். எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திரகுலத்தை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து காவல்துறை அனுமதி கோரி கடிதமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தலைவர் பங்க் ராஜேந்திரன் செல்போனிற்கு வந்த 15க்கும் மேற்பட்ட அழைப்பில் அவரை தரக்குறைவாக விமர்சித்து கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளனர். இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கண்டறிந்து கைது செய்ய கோரி புதிய தமிழகம் மாநகர செயலாளர் வக்கீல் சங்கர், புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன், மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் வக்கீல் பொன்.முருகேசன், தேவேந்திரகுல அறக்கட்டளை தலைவர் சேட்டு உள்ளிட்டோர் மாநகர கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தனர்.