×

சீர்காழி புதிய பேருந்து நிலைய கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


சீர்காழி, டிச.3: சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறை செயல்பட்டு வந்தது. இந்த கழிப்பறை கடந்த சில மாதங்களாக சரிவர பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இலவச கழிப்பறையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்ததால், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி உத்தரவின்பேரில் மேலாளர் காதர்கான், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் வீரப்பன் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்த முடியாமல் இருந்த கழிவறையை சுத்தம் செய்தனர். இதனால் பல மாதங்களுக்குப் பிறகு கழிப்பறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தொடர்ந்து கழிப்பறையை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sirkazhi ,administration ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்