கரூர், டிச. 3: கருர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கினை தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்திய 29பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் பசுபதீஸ்வரா கோயில் குடமுழுக்கு விழா டிசம்பர் 4ம்தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்த வேண்டும் என சில நாட்களாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி, உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பசுபதீஸ்வரா கோயில் அருகே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த டவுன் போலீசார், அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்திய 4 பெண்கள் உட்பட 29பேரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால், கோயில் வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.