×

தென்றல் நகரை சூழ்ந்த மழைநீர் குடியிருப்போர் தவிப்பு

மானாமதுரை, டிச.3: மானாமதுரை காட்டு உடைகுளம் பகுதி தென்றல் நகரில் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. தற்போது மேலும் மழை பெய்து வருவதால் குடியிருப்புகளில் இருப்போர் கலக்கம் அடைந்துள்ளனர்.
மானாமதுரை 1வது வார்டு காட்டு உடைகுளம் பகுதியில் கணபதிநகர், தென்றல் நகர் உள்ளன. தென்றல் நகரில் தற்போது புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக அருகிலுள்ள நாடாம்பி கண்மாய், நவத்தாவு கண்மாய்கள் நிரம்பி மாறுகால் பாய்ந்தது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் தென்றல் நகர் பகுதியில் தேங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீரும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.

இதனால் வீடுகளை சுற்றிலும் சேறு, களிமண் நிறைந்த மழைநீரை கடந்து வீடுகளுக்கு செல்லமுடியாமல் குடியிருப்போர் அவதிக்குள்ளாகினர். பால் விற்பனை செய்பவர்கள் தண்ணீரில் கடந்து வீட்டிற்கு வரமறுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் தண்ணீரில் சிரமப்பட்டு நடந்து வந்து நகர்ப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த சரவணன் கூறுகையில், கடந்த வாரம் கண்மாய் நீர் வெளியேறி இங்கு பெருகியது. தொடர்ந்து மழை பெய்ய துவங்கியதால் குடியிருப்புகளை நீர் சூழ்ந்து தீவுபோல மாறி வருகிறது. எனவே எங்கள் பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் வாய்க்கால் அமைக்கவேண்டும் என்றார்.

Tags : rainwater dwellers ,city ,
× RELATED வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்