மதுரை, டிச. 3: கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு அமலானது முதல் நீதிமன்றங்களில் உள்ள வக்கீல் சேம்பர்களும், வழக்கறிஞர்கள் சங்க அலுவலகமும் மூடப்பட்டன. தற்போது நீதிமன்ற பணி துவங்கி வரும் நிலையில் சேம்பர்களும், சங்க அலுவலகங்களும் திறக்கப்படவில்லை. இதனால் வழக்கறிஞர்களின் பணி பாதிப்பதாகவும், சேம்பர்களை திறந்து பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமெனவும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரையில் வக்கீல் சேம்பர், வக்கீல் சங்க அலுவலகத்தை திறக்கக்கோரி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மதுரை வழக்கறிஞர் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் மோகன்குமார், முன்னாள் செயலாளர் ராமசாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஷாஜி செல்லான், பாஸ்கரன், வக்கீல்கள் ரமேஷ், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.