×

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் ஐ.பெரியசாமி எம்எல்ஏ உறுதி

திண்டுக்கல், டிச.3: வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ கூறினார். `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று அவர் திண்டுக்கல் ஒன்றியத்தில் தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். அப்போது பெரியகோட்டை பகுதியில் வயல் வெளிகளில் வேலை பார்த்துவந்த பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். சீலப்பாடி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வரும் பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பின் அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி  அதிமுக அரசு சிந்திக்கவில்லை. மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்க அக்கட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது?  ஏழை, எளிய மக்கள் கொரோனாவால் பலர் இறந்தார்கள். அங்கு எட்டிப் பார்க்காத அதிமுக, மக்களிடம் வாக்கு கேட்க உரிமை இருக்கிறது?

 வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியினர் பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கைப்பற்றும் என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் பசீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் பின் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்திலும், பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ள சின்ன பள்ளப்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.

Tags : I. Periyasamy MLA ,constituencies ,DMK ,
× RELATED தமிழகத்தில் 21 தொகுதிகளில்...