×

மீன்குட்டையில் செத்து மிதந்த மீன்கள்

காட்டுமன்னார்கோவில், டிச. 3: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் கச்சேரித்தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் - இந்திராகாந்தி. வயதான இந்த தம்பதிகளுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். 3 பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். திருமணம் ஆகாத ஒரு பெண்ணுடன் தம்பதிகள் வசித்து வந்தனர். தங்களது நிலத்தில் மீன்குட்டை வெட்டி மீன் வளர்த்து வருகின்றனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இதில் போட்லாக், கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட நாட்டுவகை கெண்டை மீன் விரலிகளை இறக்கி வளர்த்துவந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை குளம் இருந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது இதனையடுத்து பாலசுப்பிரமணியன் அங்கு சென்று பார்த்துள்ளார் அப்போது குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. மேலும் குளத்தில் இருந்த நீர் கருப்பாக காணப்பட்டதுடன் மீன்களின் வாய் மற்றும் செவில் பகுதிகளில் கருப்பு நிரமாக காணப்பட்டது. இதனை பார்த்து கதறியழுத வயதான தம்பதியர், காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் அங்குவந்த போலீசார் மற்றும் நாட்டார்மங்களம் ஊராட்சிமன்ற தலைவர் சுதாமணிரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வயதான தம்பதியருக்கு ஆறுதல் கூறினர்.

Tags : pond ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...