×

சிவகங்கை அருகே பாசனத்திற்கு மடை இன்றி வீணாகும் கண்மாய் தண்ணீர்

சிவகங்கை, நவ.30:  சிவகங்கை அருகே கவுரிப்பட்டியில் பழுதான மடையை பராமரிக்காமல், நன்றாக இருந்த மடையையும் வீணடித்ததால் கண்மாயில் நீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே கவுரிப்பட்டி ஊராட்சியில் கவுரி கண்மாய் உள்ளது. சுமார் 50 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனம் செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் கவுரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர்.

இக்கண்மாய்க்கு மூன்று மடைகள் உள்ளன. இதில் நடுமடையே பிரதான மடையாகும். இந்த மடை மூலமே விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. இந்நிலையில் மூன்று மடைகளும் சேதமடைந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு நடு மடை மட்டும் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் பெய்த கனமழையின் போது மடை மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மடை முற்றிலும் இல்லாமல் போனது. மடை நீரில் அடித்து செல்லப்பட்டதை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக சரி செய்யப்படும் என கூறினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் நன்றாக இருந்த மற்றொரு மடையை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சீரமைத்தனர். அதிலும் நீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட வில்லை. இதனால் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச வழி இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது கன மழை பெய்து கவுரிப்பட்டி கண்மாயில் விவசாயத்திற்கு தேவையான நீர் உள்ளது. ஆனால் நீரை பாய்ச்ச வழி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக மடைகள் சேதமடைந்த நிலையில் புதிதாக நடு மடை 2015ல் கட்டப்பட்டது. ஆனால் ஒரு மழைக்கே தாக்குப்பிடிக்காத கட்டுமான பணியால் மடை முழுவதுமாக நீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த மடை மூலம் தான் அதிகப்படியான நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். மேலும் நன்றாக இருந்த மடையை சீரமைப்பதாக கூறி அதிலும் நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்பாவது இருக்கும் மடையை வைத்து நிலங்களுக்கு ஓரளவு நீர் பாய்ச்சி வந்தோம். தற்போது நீர் இருந்தும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக மடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sivagangai ,
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ