மஞ்சூர், நவ.30: மஞ்சூர் அருகே உள்ள மேல்குந்தா கூர்மையாபுரம் பழங்குடியினர் கிராமத்தில் மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் கவுசல்யா தலைமை தாங்கினார். மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி. சசிகுமார், குந்தா தாசில்தார் மகேஸ்வரி, சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இந்திரா, குந்தா ஊராட்சி தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஞ்சூர் எஸ்.ஐ.ராஜ்குமார் வரவேற்றார். முன்னதாக பொதுமக்கள் தரப்பில் குறைகள் கேட்டறியப்பட்டது.
இலவச வீடுகட்டி தரவேண்டும் மற்றும் முதியோர் உதவி தொகை, தையல் இயந்திரங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க கோரி பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து டி.எஸ்.பி சசிகுமார் பேசும்போது, கிராமத்திற்குள் சந்தேகப்படும்படியான அந்நிய நபர்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்நிலையம் மற்றும் அருகில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தில் வருவாய், காவல், ஊராட்சி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.