திருவாரூர், டிச.1: திருவாரூர் எம்.எல்.ஏ. தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் கட்சியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் பேசுகையில்,அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர் ஏழை, எளிய மாணவர்களுக்காக துவங்கிய சத்துணவு திட்டத்தை திட்டத்தை பார்த்து இந்தியாவே வியந்து போனது. அவருடைய வழியில் ஆட்சி நடத்திய முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றார். தற்போது அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் பழனிசாமியின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் இந்திய அளவில் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை விஸ்தரிக்க முன்வந்துள்ளன. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் 3வது முறையாகவும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
எனவே அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வாக்குச்சாவடி முகவர்கள் அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்கிக் கூற வேண்டும் என்பதுடன் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும் செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சேகர், பாஸ்கர், நகர செயலாளர் மூர்த்தி ,பேரவை நகர செயலாளர் கலியபெருமாள், எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது அஸ்ரப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.