×

காங். நிர்வாகி கொலை முயற்சி வழக்கு முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை சென்னையில் முகாம்

புதுச்சேரி, டிச.1: புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகி ஏகேடி ஆறுமுகம் கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை சென்னையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளது.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், வயல்வெளி நகரில் வசிப்பவர் ஏகேடி ஆறுமுகம் (56). காங்கிரஸ் பொதுச்செயலாளரான இவரை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது மேட்டுப்பாளையத்தில் படுகொலை செய்யப்பட்ட என்ஆர் காங்கிரஸ் பிரமுகரான மாந்தோப்பு சுந்தரின் ஆதரவாளர்களான காமராஜர் நகர் சரத்குமார், சேட்டு, ஆனஸ்ட்ராஜ், ஆனந்த் உள்ளிட்ட 9 பேரை காவல்துறை கைது செய்தது. இக்கும்பலிடமிருந்து 3 நாட்டு வெடிகுண்டு, கத்தி, பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும் முக்கிய குற்றவாளிகளான ஜோஸ்வா, மது, முத்தியால்பேட்டை மணி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.

அவர்களை புதுச்சேரி முழுவதும் போலீசார் தீவிரமாக தேடியும் சிக்கவில்லை.இதனிடையே 3 பேரும் ஐகோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு சென்னையில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மேற்பார்வையில் எஸ்ஐ தமிழரசன் தலைமையிலான தனிப்படை நவ.29ம்தேதி அங்கு விரைந்தது. 2வது நாளாக நேற்றும் அங்கேயே அவர்கள் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விரைவில் குற்றவாளிகள் சிக்குவர் என்று தெரிகிறது. அதன்பிறகே இவ்வழக்கில் மேலும் பல திடுக் தகவல்கள் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : camp ,Chennai ,administrator ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...