செங்கல்பட்டு: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கலூரி, மருத்துவமனை சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. டீன் சாந்திமலர் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ஹரிகரன், துணை முதல்வர் அனிதா, இருப்பிட மருத்துவ அலுவலர் அனுபமா, பேராசிரியர்கள் நர்மதாலட்சுமி, சிந்துஜா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஆர்டி நம்பிக்கை மையத்தின் முதன்மை மருத்துவர் கௌதமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு டிஆர்ஓ பிரியா, ஆர்டிஓ செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், முதுநிலை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், ஏ.ஆர்.டி பயனாளிகள், , தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏ.ஆர்.டி மருத்துவ அலுவலர் தான்யா தலைமையில், எய்ட்ஸ் நோய் பரவும் முறை, தடுக்கும் முறைகள், ஏ.ஆர்.டி மருந்துகள் மற்றும் சமுதாய பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. கருத்தரங்கம் சார்பில், கட்டுரை, கோலம் போடுதல் மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான எய்ட்ஸ் தின ஆய்வு பொருளான எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று நோய்க்கான முடிவு மற்றும் பின்னடைவு தாக்கம் என்பதை வலியுறுத்தி எய்ட்ஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தோல் நோய் பிரிவு பேராசிரியர் சிந்துஜாபாலாஜி நன்றி கூறினார்.