×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களில் நிவர் புயல் எதிர்கொள்ள 750 தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் சென்றவர்களும் பணி திரும்ப உத்தரவு

வேலூர், நவ.24: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட 7 மாவட்டங்களில் நிவர் புயலை எதிர்கொள்ள 750 தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சத்தியநாராயணன் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தம் நிவர் புயலாக மாறி உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையிலும், விடுப்பில் இருப்பவர்கள் பணிக்கு திரும்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விடுப்பு எடுக்கும்படி தீயணைப்பு படை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சத்தியநாராயணன் கூறியதாவது: தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும்போது பலத்த காற்றும் வீசும். இதனால் அனைத்து நடவடிக்கைக்கும் தயார் நிலையில் உள்ளோம். தீயணைப்பு துறை இயக்குனர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு காவல் நிலையங்களில் உள்ள வீரர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சேதத்தை ஏற்படுத்திய புயல்களின்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது. குறிப்பாக மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களை காப்பாற்றுவது, தாழ்வான, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்பது, விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் தீயணைப்புத்துறை வடமேற்கு மண்டல துணை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்ற வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மொத்தம் 750 ஊழியர்கள் பணியில் தயார் நிலையில் உள்ளனர். முதற்கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கூடுதலாக ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் அதில் உள்ள உபகரணங்கள் சோதனை செய்யப்பட்டு, அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்ய அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : firefighters ,districts ,Tirupati ,Ranipettai ,Trincomalee ,Vellore ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...