×

விவசாயத்திற்கு வழங்கும் நிதி சலுகைகள் அனைத்து நெசவாளர்களுக்கும் வழங்க வேண்டும்

திருப்பூர், நவ.24: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து மனு அளித்தனர். திருப்பூர், நெசவு தொழில் செய்து வருபவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனா பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால், நெசவு தொழில் செய்து வருபவர்களின் நிலை மோசமாக உள்ளது. எனவே, நெசவாளர்களுக்கு நிவாரண தொகை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்திக்குண்டான மூலப்பொருட்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வருவதற்குண்டான கட்டுபாடுகளை தளர்த்தி மூலப்பொருட்கள் ஜவுளி உற்பத்திக்கு எளிதாக கிடைக்க செய்ய வேண்டும். விவசாயத்திற்கு வழங்கும் நிதி சலுகைகள் அனைத்தும் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளது.

திருப்பூர், மாநகராட்சி 17வது வார்டு பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியதாவது: புதிய காமராஜர் நகர், சோழன் நகர், ஜேப்பி நகர், அம்மன் நகர் மற்றும் ஜி.என். நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகிறோம். ஏற்கனவே எங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற போராடி வருகிறோம். இந்நிலையில் தற்போது மற்றொரு புதிய டாஸ்மாக் கடையை அமைக்க முயற்சி மேற்கொள்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பயன்படுத்தும் பிரதான சாலை வழியில் டாஸ்மாக் கடை அமைய உள்ளது. இதனால், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவாக்கும். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும். ஆகவே, டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் கூறி உள்ளனர்.

சின்னாண்டிபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரியாண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர் மற்றும் கோழிப்பண்ணை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்கும்,  பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோயிலுக்கு பொங்கல் பூச்சாட்டு விழா வரும் 29ம் தேதி முதல் டிச.10ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகவே, பொங்கல் பூச்சாட்டு விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளனர்.

திருப்பூர், உடுமலை அடுத்த கோட்டமங்கலம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரின் கிழக்கு பகுதியில் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். நாங்கள், பூர்வீகமாக பயன்படுத்தி வந்த பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வழிந்தோட முடிவதில்லை. இப்பகுதியில்,  சில நாட்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை முழுவதுமாக தற்போது சேதம் அடைந்தது. இதுகுறித்து, ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை. பள்ளி குழந்தைகள், விவசாயிகள் உட்பட பலருக்கும் பிரதான பாதையாக இந்த சாலை இருப்பதால் தற்போது எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்ல வடிகால் அமைத்து, வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அமைத்து தர வேண்டும் என மனுவில் கூறி உள்ளனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா