×

தொட்டபெட்டாவில் நீர் பனியின் தாக்கம் அதிகரிப்பு

ஊட்டி, நவ. 24:  நீலகிரி மாவட்டத்தின் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் மற்றும் மலர் செடிகள் பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்களும், பின் அக்டோபர் மாதம் துவங்கி சில நாட்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். 6 மாதங்கள் மழை கொட்டி தீர்த்தவுடன் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனி விழத்துவங்கும். தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் உறைபனி விழத் துவங்கும். இம்முறை மழை குறைந்த நிலையில், நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. உறை பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டாவில் சிகரத்தில் நீர் பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், இங்குள்ள தேயிலை பூங்காவில் உள்ள அலங்கார செடிகள், மலர் செடிகள் ஆகியன பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் கோத்தகிரி மிலார் செடிகள் மற்றும் தாவைகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. அதே போல், தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவைகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Dodabetta ,
× RELATED தொட்டபெட்டா சாலை மூடப்பட்டதால்...