×

கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாப பலி

கள்ளக்குறிச்சி, நவ. 24: கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற 2 வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்து. கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் கவுதம் (19), மணி மகன் தீபக் (19) ஆகிய 2 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவர்களுடைய தாத்தா இறந்துவிட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கொரோனா நோய் தொற்றால் கிராமத்திலேயே தங்கியுள்ளனர்.  இந்நிலையில் நேற்று அதே கிராம பகுதியில் உள்ள கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கல்குவாரியில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் குளிப்பதற்காக 10க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்களுடன் சென்றுள்ளனர். கல்குவாரியில் குளித்து கொண்டிருந்த போது வாலிபர் கவுதம் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அப்போது கவுதமை, தீபக் காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனால் பார்த்த சக நண்பர்கள் கூச்சலிடவே, ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு குட்டை தண்ணீரில் மூழ்கிய 2 வாலிபர்களையும் காப்பாற்ற முயன்றனர்.
 
குட்டையில் நீண்ட நேரமாக தேடிப்பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கல்குவாரி குட்டையில் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 பேரின் சடலங்களையும் மீட்டெடுத்தனர். இதையடுத்து 2 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் 2 வாலிபர்கள் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : teenagers ,pond ,Kalkuvari ,Kallakurichi ,
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...