×

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம்: அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி

திருவண்ணாமலை, நவ.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவத்தையொட்டி நேற்று கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி, தீபத்திருவிழாவின் 4ம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. அதையொட்டி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் செய்தனர். தொடர்ந்து, காலை 10 மணியளவில காலை உற்சவம் நடந்தது. அப்போது, கோயில் 5ம் பிரகாரத்தில், விநாயகர், சந்திரசேகரர் அலங்கார ரூபத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர்.

பின்னர், இரவு 8 மணியளவில் இரவு உற்சவம் தொடங்கியது. வழக்கமாக தீபத்திருவிழாவின் 4ம் நாள் உற்சவத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவது வழக்கம். தற்ேபாது, கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டதோடு, வழக்கமான வாகனங்களும் பயன்படுத்துவதில்லை. எனவே, தனித்தனி விமானங்களில் விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள், கோயில் 5ம் பிரகாரத்தில் பவனி வந்தனர். பஞ்சமூர்த்திகள் பவனியை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே, திருக்கோயில் ஊழியர்கள், திருப்பணியாளர்கள், போலீசார் மட்டுமே பங்கேற்றனர்.
அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் 8 மணி வரை பொது தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.



Tags : celebration ,fire festival ,Thiruvannamalai ,Panchamoorthy Bhavani ,Annamalaiyar temple ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்