கிருஷ்ணகிரி, நவ.23: கிருஷ்ணகிரி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி நடந்தது. இப்பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் துவக்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலாவதி, பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் வேதா, மரியரோஸ் மற்றும் வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொ) கோதண்டபாணி, ஆற்காட் தொண்டு நிறுவன தன்னார்வலர் விஜயலட்சுமி, நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பழையபேட்டை முர்த்துஜாதெரு, மக்கான் தெரு, மில்லத்நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லா, இடைநின்ற, புலம் பெயர்ந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பினை மேற்கொண்டனர். இதில், சைல்ட் லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, பணியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் மற்றும் மேற்பார்வையாளர் கோதண்டபாணி ஆகியோர் செய்திருந்தனர்.