×

காற்றழுத்த தாழ்வு நிலை விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை படகுகள் சேதமடையாமல் இருக்க கயிறு கட்டி பாதுகாக்கும் மீனவர்கள்

அறந்தாங்கி, நவ.23: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகுகள் இன்று(திங்கள்கிழமை)முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி மறுத்துள்ளதால், விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகுகள் இன்று (திங்கள்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் கடந்த கஜா புயலின்போது வீசிய காற்றால் விசைப்படகுகள் சேதமடைந்ததைப் போல இம்முறையும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நங்கூரம் இட்டு நிறுத்தியதுடன், விசைப்படகுகளை கயிறுகளால் கட்டியும் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதியில் தினசரி பல லட்ச ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Fishermen ,sea ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...