கூடலூர், நவ. 23: கூடலூர் மைசூர் சாலையில் கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள கழிப்பறைகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கழிப்பறையை பயன்படுத்த வரும் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து திரும்பி செல்கின்றனர். இதனால் பயணிகளும் இந்த கழிப்பிடம் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கழிப்பறையை ஒப்பந்த பிரச்னை காரணமாக நிர்வாகம் மூடி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் தினசரி திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டிய நிலையில் சுற்றுப்புற பகுதியில் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் கழிப்பறை மூடப்பட்டு இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கட்டண கழிப்பிடம் திறந்து செயல்பட்ட வேளையி கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக பயணிகளுக்கும் பணியில் இருந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே இந்த கட்டன கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுப்பதோடு,
கட்டண பிரச்னைகளால் ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்கள், பிரச்சினைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் பயணிகள், பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.