திருவாரூர், நவ. 22: மீனவர்களையும் மீன்பிடித் தொழிலையும் அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய மீன்வள கொள்கையை ரத்து செய்யக்கோரி ஏஐடியுசி மீனவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களையும் மீன்பிடித் தொழிலையும் அழிக்கும் வகையில் மத்திய அரசு மூலம் கொண்டுவரப்பட்டுள்ள 2020 தேசிய மீன்வள கொள்கையினை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திட வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மீனவர் குறைதீர் கூட்டத்தினை அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நடத்திட வேண்டும். நலவாரிய அடையாள அட்டையினை விரைந்து வழங்கிட வேண்டும்.
மீனவர் கூட்டுறவு சங்கத்தில் அரசியல் பாகுபாடின்றி அனைத்து மீனவ தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வரும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன் ஏ.ஐடி.யு.சி மீனவர் தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சின்னத்தம்பி, நாகை எம் பி செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, ஏஐடியுசி தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.