சாயல்குடி, நவ.22: சாயல்குடி அருகே மூக்கையூர், மாரியூர், கீழமுந்தல், வாலிநோக்கம் கடற்கரைகளில் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட மீன்வள சங்கங்களின் சம்மேளனம் மற்றும் மூக்கையூர் மீனவர் சங்கம் சார்பில் மூக்கையூர் மீன்பிடி துறை முகத்தில் மீன் வள தினம் கொண்டாடப்பட்டது. நாட்டு படகு, வல்லம், விசை படகு, வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பிறகு கடலில் பால், பூக்கள் படையலிட்டு மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு மூக்கையூர் தேவாலய பங்கு தந்தை லூர்துராஜ் தலைமை வகித்தார்.
சம்மேளனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், கிராம தலைவர் ஜான்போஸ்கோ முன்னிலை வகித்தார். மீனவ சங்க தலைவர் ஜோசப் வரவேற்றார். இதனை போன்று மாரியூர் கடலில்பஞ்சாயத்து தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமையில் மீனவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பிறகு நாட்டுபடகு, வல்லம், வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கீழமுந்தல் கடற்கரையில் திமுக கவுன்சிலர் வசந்தா தலைமையில் கடலில் பால், பூக்கள் படைத்து வழிபாடு செய்யப்பட்டது. பிறகு மீன்பிடி சாதனங்களுக்கு பூஜை நடந்தது.